Published : 16 Mar 2020 07:26 PM
Last Updated : 16 Mar 2020 07:26 PM

கரோனா முன்னெச்சரிக்கை: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் யோசனை

உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனம், மால்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், சினிமா படப்பிடிப்புகளும் மார்ச் 19-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

தற்போது கரோனா வைரஸ் முன்னேற்பாடுகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”சுமார் 8 வாரங்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் SARS - CoV2 (Covid-19) வைரஸ் கடந்த 3 வாரங்களாக இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 105 தான் என்றாலும், அடுத்து வரவிருக்கும் 2 வாரங்கள் மிக முக்கியமானது. ஏனென்றால் சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் என பாதிப்படைந்த எல்லா நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-வது வாரத்திலிருந்து 4-வது மற்றும் 5-வது வாரத்தில் ஆறிலிருந்து - பத்து மடங்காக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இது இந்தியாவிலும் நடக்காமல் தடுக்க முடியும்.

அதைச் சாத்தியப்படுத்த தமிழக அரசு அனைத்து மருத்துவர் மற்றும் மருத்துவமனைகளோடு (பொது மற்றும் தனியார்) இணைந்து செயல்பட வேண்டும். வைரஸ் தொற்றைச் சமாளிக்க முறையான வழிமுறைகளை அரசு அனைத்து மருத்துவர்களுக்கும் விளக்குவது சுகாதாரத்துறையின் செயல் வேகத்தை அதிகப்படுத்தும்.

எவருக்கேனும் வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இருப்பின் அவர்கள் எல்லோரையும் உறுதிப்படுத்தும் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் அனுப்புவது என்ற நடைமுறை, நோய் தொற்றில்லாதவருக்கும், கூட்டத்தினால் அந்த இடத்திலிருந்து வைரஸ் பரவிட வாய்ப்புகளை உருவாக்கும்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளோடு சந்திப்பு நடத்தி நோய்த்தொற்றை உறுதி செய்யும் பரிசோதனைகளை எடுக்க வழிமுறைகளையும், அதிகாரமும் கொடுத்தால் வைரஸ் தொற்று வேகமாகக் கண்டறியப்படுவதோடு, வைரஸ் தொற்று உள்ளதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் ஒரே இடத்தில் கூடுவதையும் தவிர்க்கலாம்.

வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் பணி விரைந்து நடந்தால்தான் உரிய நேரத்தில் சிகிச்சை என்பதும் பரவாமல் தடுப்பதும் சாத்தியம். அதற்கு அரசு இப்போது உபயோகப்படுத்தும் 4 பரிசோதனைக் கூடங்கள் மட்டும் போதாது. H1N1 பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடங்களுக்கும் அந்தப் பணியைச் செய்திட அங்கீகாரமும், வழிமுறைகளையும் வழங்கினால் மட்டுமே வைரஸ் தொற்று கண்காணிப்பு சீரிய முறையில் தாமதமின்றி நடந்து, நோய் பரவுதலைத் தடுக்க முடியும்.

பொது இடங்களில் கூடுவதற்கு எதிராக மக்களை அறிவுறுத்தியிருந்தாலும், நோய் தொற்று பரவும் பட்சத்தில் அதை எதிர்கொள்ளத் தயாராக ஒரே நேரத்தில் அதிக பேருக்கு நோய்த் தொற்றை அறிய உதவும் ரத்த மாதிரி பரிசோதனை மூலம் நோய்த் தொற்றைக் கண்டறியும் சாதனத்தைத் தயாராக வைத்திருப்பதும் மிக மிக அவசியம். தனிமனித சுகாதாரம் மற்றும் கண்டறியும் வழிமுறைகள் துரிதமாகவும், பரவலாகவும் இருந்தால் வைரஸ் தொற்றை முறியடிக்கலாம். விழிப்புடன் இருப்போம்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x