Published : 14 Mar 2020 01:42 PM
Last Updated : 14 Mar 2020 01:42 PM

கரோனா: ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்; ராமதாஸ்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 14) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மீண்டும் சொல்கிறேன். கரோனா வைரஸைத் தடுக்க பிறருடன் கை குலுக்குவதைத் தவிருங்கள்; கை கூப்பி வணக்கம் சொல்லுங்கள். குறைந்தது அரை மணிநேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதும் சோப்பால் கைகளை 20 விநாடிகளுக்கு நன்றாகக் கழுவுங்கள்!

தமிழ்நாட்டில் 40% மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில்தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை இதற்காகக் கேட்டுப் பெறலாம்!

கரோனாவைத் தடுக்க சான்பிரான்சிஸ்கோ நகரில் பொது இடங்களில் இசையுடன் கூடிய கை கழுவும் எந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 20 விநாடிகளுக்கு ஒலிக்கும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அல்லது பிற பாடலை ரசித்தபடியே கைகளைக் கழுவலாம். சென்னையிலும் இந்த முயற்சியைப் பரிசீலிக்கலாம்!

அச்சுறுத்துவதற்காக அல்ல...முன்னெச்சரிக்கையாக: கரோனா வைரஸ் அச்சம் தணியும் வரை குழந்தைகளும், முதியவர்களும் வீடுகளை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்கலாம். போதிய பாதுகாப்பு வசதிகளுடன் வீடுகளுக்குள் இருப்பது கரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றும்!

கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து கேரள எல்லையோர மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் தினமும் ஆலோசனை நடத்த வேண்டும்; அறிவுரை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x