Published : 13 Mar 2020 02:45 PM
Last Updated : 13 Mar 2020 02:45 PM

அமெரிக்க ராணுவம்தான் வூஹானுக்கு கரோனாவைக் கொண்டு வந்திருக்கும்: சீன அதிகாரியின் பேச்சால் சர்ச்சை

அமெரிக்க ராணுவம்தான் வூஹானுக்கு கரோனாவைக் கொண்டு வந்திருக்கும் என்று சீன உயர் அதிகாரி தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் வூஹான் நகரத்தில் இருப்பவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வூஹான் நகரமே தனிமைப்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் சிலர் கரோனா வைரஸை வூஹான் வைரஸ் என்று அழைத்தனர். இந்நிலையில் சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என்று சீன உயர் அதிகாரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பெருந்தொற்று நோயை வூஹானுக்குக் கொண்டு வந்தது அமெரிக்க ராணுவமாகத்தான் இருக்கக் கூடும்.

அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் சிலருக்கு கோவிட்-19 தொற்று இருந்தது. காய்ச்சலால் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை பேருக்கு கோவிட்-19 உடன் தொடர்பு உள்ளது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x