Last Updated : 12 Mar, 2020 04:39 PM

 

Published : 12 Mar 2020 04:39 PM
Last Updated : 12 Mar 2020 04:39 PM

72 மணிநேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.18 லட்சம் கோடி இழப்பு: பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி அறிக்கை அளிக்க காங். வலியுறுத்தல்

உலக அளவில் கரோனா வைரஸ் தொடர்பான பீதியாலும், அச்சத்தாலும் கடந்த 72 மணிநேரத்தில் சிறு, குறு முதலீட்டாளர்கள் ரூ.18 லட்சம் கோடியை இழந்துள்ளார்கள். பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் அதன் எதிரொலி இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை 1900 புள்ளிகளுக்கும் சரிவு கண்ட பங்குச் சந்தையில் இன்று 2300 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகப் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் இன்று பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,700 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 72 மணிநேரத்தில் சிறு, குறு முதலீட்டாளர்களுக்கு ரூ.18 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் முதலீடு செய்தவர்கள் மாத ஊதியம் பெறுபவர்கள், சிறு முதலீட்டாளர்கள்தான்.

கரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வாய் மூடி மவுனம் காக்கிறார்கள். நாட்டின் பொருளாதார நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை கரோனா வைரஸ் பீடித்துள்ளது. அதை மீட்க வேண்டும்".

இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.75.16 பைசாவாகச் சரிந்தது. இதைக் குறிப்பிட்டும், பாஜகவில் 75 வயதுக்கு மேல் உள்ள மார்க்கதரிசி மண்டலோடு ஒப்பிட்டும் சுர்ஜேவாலா கிண்டல் செய்து ட்வீட் செய்தார்.

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், "பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75.16 பைசாவாகச் சரிந்துவிட்டது. இந்திய ரூபாய் தற்போது மார்க்கதர்ஷக் மண்டலில் சேர்ந்துவிட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 35 டாலராக சரிந்துவிட்டது. ஆனால், பெட்ரோல் விலை இன்னும் லிட்டர் ரூ.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2004 நவம்பரில் கச்சா எண்ணெய் விலை 35 டாலராக இருந்தது.

அப்போது பெட்ரோல் விலை ரூ.37.84 பைசா இருந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை 35 டாலராக சரிந்தபோது பெட்ரோல் விலை ரூ.70 ஆக இருக்கிறது. மோடி அரசு சாமானிய மக்களின் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x