Published : 12 Mar 2020 01:38 PM
Last Updated : 12 Mar 2020 01:38 PM

அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்: ட்விட்டர் உத்தரவு

உலகம் முழுவதும் உள்ள அனைத்து ட்விட்டர் ஊழியர்களும் இனி வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்றால் ஏராளமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அளித்து வருகின்றன அல்லது வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனம், தனது ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே இனி பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் மனித வளத்துறைத் தலைவர் ஜெனிஃபர் கிறிஸ்டீ, ''முன்னெப்போதும் இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது. முந்தைய வழிகாட்டுதல்களை மீறிச் செல்கிறோம்.

எனினும் இது இப்போதைய தேவை. உலகம் முழுவதும் அனைத்து ஊழியர்களும் இனி வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டு''ம் என்று தனது வலைப்பூவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தென் கொரியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாட்டில் தனது ஊழியர்கள் கட்டாயமாக வீட்டில் இருந்து பணியாற்ற ட்விட்டர் உத்தரவிட்டிருந்தது. அதேபோல, தொழில்முறை பயணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் ட்விட்டர் தள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x