Published : 12 Mar 2020 01:55 PM
Last Updated : 12 Mar 2020 01:55 PM

கரோனா வைரஸ்; ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஐரோப்பா நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்கு அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை 1,135 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38 பேர் கரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வர ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, “கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நம் நாட்டில் நுழைவதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்தப் புதிய தடை வெள்ளிக்கிழமை இரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தத் தடை அமெரிக்க மக்களுக்குப் பொருந்தாது” என்று தெரிவித்தார்.

மேலும், யுகேவுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கோவிட்-19 காய்ச்சலால் யுகேவில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட் - 19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கோவிட் காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x