Last Updated : 12 Mar, 2020 10:56 AM

 

Published : 12 Mar 2020 10:56 AM
Last Updated : 12 Mar 2020 10:56 AM

இந்தியாவில் சுற்றுலா விசாக்கள் வழங்குவது ஏப்ரல் 15 வரை தற்காலிக நிறுத்தம்: கரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அனைத்து சுற்றுலா விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவாகிய கோவிட் - 19 வைரஸ், தற்போது ஈரான், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட உல நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை, 60-க்கும் மேற்பட்டோர் கோவிட் - 19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்த தற்காலிக நிறுத்தம் மார்ச் 13ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

"ராஜாங்க, அதிகாரபூர்வ, ஐ.நா / சர்வதேச நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திட்ட விசாக்கள் தவிர தற்போதுள்ள அனைத்து விசாக்களும் 2020 ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வெளிநாட்டு குடிமகனுக்கு காலவரையின்றி இந்திய குடியரசில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கும் குடியேற்ற நிலைக்காக புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள ஓசிஐ அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் இந்த உத்தரவு கட்டுப்படுத்தாது.

கட்டாய காரணத்திற்காக இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் எந்தவொரு வெளிநாட்டவரும் அருகிலுள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்பு கொள்ளலாம்,

இந்தியர்கள் உட்பட இந்தியாவுக்குள்வரும் அனைத்து பயணிகளும் சீனா, இத்தாலி, ஈரான், கொரியா குடியரசு, பிரான்ஸ், பிப்ரவரி 15 க்குப் பிறகு ஸ்பெயினும் ஜெர்மனியும் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும்.

இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x