காஞ்சிபுரம் நபர் முழுமையாக குணமடைந்தார்; கரோனா இல்லா தமிழகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் 

காஞ்சிபுரம் நபர் முழுமையாக குணமடைந்தார்; கரோனா இல்லா தமிழகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் 
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட காஞ்சிபுரம் நபர் பூரண குணம் அடைந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் ஒருவர்கூட கரோனா பாதிப்பில் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளைக் கண்காணிக்கவும் பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து சென்னை விமான நிலையம் உள்பட தமிழகத்தில் உள்ள 4 முக்கிய விமான நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு தினமும் 52 விமானங்களில் 8500 பயணிகள் வருகின்றனர். தற்போது சீனா, ஜப்பான், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து விமானங்களிலும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதுவரை விமான நிலையங்களில் 1 லட்சத்து 111 பேரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 1,243 பேரை தொடர்ந்து 28 நாட்களாக கண்காணித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது.

ஆனால், சோதனையில் அது கண்டறியப்படாமல் நான்கைந்து நாட்கள் கழித்து அவர் கரோனா பாதிப்புடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர தகவலறிந்து உடனடியாக அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஒரே ஒரு நபருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது. தொடர் சிகிச்சையின் விளைவாக அவர் முழுமையாக குணமடைந்தார். இந்தத் தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் இன்று பகிர்ந்துள்ளார். அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த 15 வயதுச் சிறுவனும் குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பதிவு:

''நமது மாநிலத்துக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நபர் முழுமையாக குணமடைந்துவிட்டார். அவரது சோதனை மாதிரிகள் கரோனா இல்லை என்பதைத் தெரிவித்துள்ளது. இந்த வேகமான மீட்புக்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், தேவைகளைக் கையாண்ட நிபுணர்களின் நிபுணத்துவமும்தான். தற்போது நம் மாநிலம் கரோனா இல்லா தமிழகமாக உள்ளது''.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in