Last Updated : 10 Mar, 2020 06:44 PM

 

Published : 10 Mar 2020 06:44 PM
Last Updated : 10 Mar 2020 06:44 PM

கரோனா வைரஸ் அச்சம்; புதுச்சேரியில் முகக் கவசத்தை இலவசமாகத் தரும் அதிமுக

புதுச்சேரி

கரோனா வைரஸிலிருந்து காக்க, அதிமுக புதுச்சேரி மக்களுக்கு முகக் கவசத்தை இலவசமாகத் தரத் தொடங்கியுள்ளது.

புதுச்சேரி உப்பளம் தொகுதி அதிமுக சார்பில் கரோனா வைரஸிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இலவச முகக் கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்துகொண்டு பிள்ளுக்கடை, தாவூதுப்பேட், வாணரப்பேட் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "புதுச்சேரியை ஆட்சி செய்யும் முதல்வர் நாராயணசாமி வழக்கம்போல் இந்தப் பிரச்சினையிலும் மிகப்பெரிய அளவில் அலட்சியத்துடன் செயல்படுகிறார்.

கண் துடைப்பு நாடகமாக அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி ஜிப்மரில் இது சம்பந்தமாக சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்துள்ளோம் என பொய்யான தகவலை முதல்வர் கூறியுள்ளார்.

ஜிப்மர் என்பது மத்திய அரசின் மருத்துவமனை. அது மத்திய அரசின் அறிவுறுத்தல்படி செயல்படுகின்றது. புதுச்சேரி காங்கிரஸ் அரசு, மாநில அரசு சம்பந்தமான எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகரப் பகுதி முழுவதும் குப்பை நிறைந்து கிடக்கின்றது. கொசுத் தொல்லையால் மிகப்பெரிய பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதமாக கொசுக்கடியால் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளன. கரோனா விஷயத்திலோ புதுச்சேரியின் செயல்பாடு மோசம். புதுச்சேரி மாநிலத்தில் 90க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் கூட மக்களுக்கு விழிப்புணர்வுப் பணிகளை அரசு செய்யவில்லை. பொதுமக்கள் நலன் கருதி வீடு வீடாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மாஸ்க் கொடுக்கத் தொடங்கியுள்ளோம்.

இந்த மாஸ்க் தருவது அரசுக்கு பெரிய செலவினம் கிடையாது. தேவைப்படும் மக்களுக்கு இலவசமாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x