Last Updated : 19 May, 2021 01:24 PM

 

Published : 19 May 2021 01:24 PM
Last Updated : 19 May 2021 01:24 PM

சக மக்களை வெறுக்க முடியுமா?- ஆஸ்கர் சினிமா தரும் தெளிவு

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதை, இனவெறி என்று உலக நாடுகள் விமர்சித்துவருகின்றன. சில பத்தாண்டுகளாகவே இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், கடந்த நூற்றாண்டின் முதற்பாதியில் நடைபெற்றது முற்றிலும் வேறு.

இன்றைக்குப் பாலஸ்தீனத்தைத் தாக்குவதை முழு மனதுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் அதே யூத மக்களை ஒட்டுமொத்தமாக உலகை விட்டே துடைத்தெறிய முயன்றார் ஜெர்மனி அதிபர் ஹிட்லர். ஜெர்மனியிலும் அது கைப்பற்றும் நாடுகளிலும் வாழ்ந்த யூத மக்கள் கத்தியின் விளிம்பிலேயே வாழ்ந்து கொண்டிருந்தனர். ஹிட்லரின் உத்தரவுக்கேற்ப குண்டு மழைகளாலும், நச்சு வாயுக்களாலும் யூத மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஹிட்லர் நிகழ்த்திய கொடுமைகளை ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் Schindler's List, The Pianist போன்ற பல படங்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆனால், எப்படி அத்தனை லட்சம் யூதர்கள் கொல்லப்படுவதை, மற்றொரு பகுதி மக்களை ஒருவரால் ஏற்றுக்கொள்ள வைக்க முடிந்தது. பெருமளவு ஜெர்மானியர்கள், ஜெர்மானிய ராணுவம் எப்படி இதை ஏற்றுக்கொண்டது என்பதை அறிந்துகொள்ள பின்வரும் படம் உதவும்.

2019இல் வெளியான டைகா வெய்டிடி இயக்கிய ‘ஜோஜோ ராபிட்’ தான் அந்தப் படம். சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம் இது. எப்படிப் பிஞ்சுகள் முதல் முதிர்ந்த மூளைகள் வரை யூத இன வெறுப்பு சார்ந்து மூளைச்சலவை செய்யப்பட்டன என்பதை அலட்டலும் ஆரவாரமும் அற்ற திரைமொழியில் கூறியிருக்கிறது. ரத்தமும் சதையுமாய் யூத இன அழிப்பைப் பல படங்கள் காட்டியிருந்த நிலையில், இந்த அம்சத்தில் மக்களின் மனதை மாற்றிய, நம்பவைத்ததன் பங்கை ஜோஜோ ராபிட் மூலம் இயக்குநர் கூறியிருக்கிறார்.

மூளையில் புதைக்கப்பட்ட சிந்தனைகள்

சிறுவனான ஜோஜோதான் கதாநாயகன். அம்மா ரோஸி பெட்ஸ்லருடன் போர்க்களம் சென்ற அப்பாவுக்காகக் காத்திருப்பவன். நாஸி மூளையோடும், மனிதநேய இதயத்தோடும் வளர்க்கப்படும் குழந்தை. கதை முழுவதும் அவனோடு நிழல் மனிதன் ஒருவன் உலவுகிறான். அவனைப் பொறுத்தமட்டில் அந்த நிழலே ஹிட்லர். அந்த நிழல் போதிப்பதே வேதவாக்கு. அவன் பள்ளியில் சொல்லப்பட்டவை, அந்த சமூகச் சூழல் கற்பித்த யூத இன வெறுப்பு, குருட்டு தேசியவாதம், ஹிட்லர் மாயை என மழலையைத் தொலைத்த குழந்தை அவன்.

எப்படியாவது ராணுவத்தில் இணைந்து யூதர்களுக்கு எதிராகப் போரிடத் துடிக்கிறான். அதைச் செய்ய முடியாமல் போகும் வகையில், ஒரு விபத்தில் காயமுற்று வீட்டுக்குள் முடங்குகிறான். தன்னால் முடிந்த சேவையாற்ற நாஸிக்களுக்கான கீழ்நிலை வேலைகளை செய்கிறான். நாட்கள் நகர, தன் தாயால் வீட்டுக்குள் ஒளித்து வைத்திருக்கப்படும் யூதப் பெண்ணான எல்சாவைக் கண்டு ஒருநாள் பதறுகிறான். அவளைக் கொல்லவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் துடிக்கிறான். தினமும் அவளோடு உரையாடுகிறான். அவளைப் பற்றி சொல்லச் சொல்லிக் கேட்கிறான். அவள் சொல்லத் தொடங்கும் போதெல்லாம், இவன் மூளையில் புதைக்கப்பட்ட யூதர்கள் குறித்தான மோசமான சிந்தனையை ஒவ்வொன்றாக உதிர்க்கிறான்.

எது வென்றது?

குழந்தை மனம் அல்லவா? போதிக்கப்பட்டதை மட்டுமே நம்பிய அவனுக்கு எல்சாவின் அன்பும், யூதர்களைப் பற்றிய உண்மையும், அவர்களும் எல்லா மனிதர்களையும் போன்றவர்களே என்பது புரியும்போது இனம்புரியாத குழப்ப உணர்வை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் மகனை நாஸி மாயையிலிருந்து மீட்டு மனிதனாக மாற்ற முயலும் ஒரு ஜெர்மானிய கம்யூனிஸ்ட் தாயின் பாசப் போராட்டமாகப் படம் நீள்கிறது. பல நாட்கள் ஊருக்கு மத்தியில் தூக்கிலிடப்படும் யூதர்களை, அவர்களுக்கு உதவியவர்களை சட்டைசெய்யாத ஜோஜோ, ஒரு நாள் அதே தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கும் தன் தாயின் கால்களைக் கட்டித்தழுவிக் கதறுகிறான். அப்போது அங்கே குறியீடுகளாய் வைக்கப்பட்டிருக்கும் கண்கள் உள்ள வீடுகளை இவன் கண்கள் சபிப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

தன் தாயின் இறப்பிற்குக் காரணம் எல்சாதான் என அவளைக் கொல்லச் செல்கிறான். ஆனால், குழந்தையான அவனால் அதைச் செய்ய முடியவில்லை. அவர்கள் இருவரும் பிரிவின் தனிமையில் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி இளைப்பாறுகிறார்கள். போர் இறுதிக் கட்டத்தை அடைகிறது. உணவில்லை, தண்ணீர் இல்லை. வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல். ஜெர்மானிய கடைசிக்கட்டப் போர்ச் சூழலைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இறுதியில் யார் வென்றார்கள், யார் விடுதலை பெற்றார்கள், ஜோஜோவைக் கவ்விய இனவாதம் வென்றதா, ரோஸியும் எல்சாவும் போதிக்க முயன்ற மனிதநேயம் வென்றதா என்பதே கதையின் முடிவு.

ஜோஜோவுடன் பேசுவோம்

குருட்டு தேசியவாதம், இனவாதத்தின் மூலமாக எப்படி ஜெர்மானியர்களை ஹிட்லர் வென்றெடுத்தார் என்பதை ஜோஜோவின் மூலம் மிக நுணுக்கமான முறையில் வெளிக் கொணர்ந்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படம் கூறும் போலி தேசியவாதம், மதவாதம் போன்றவை திரைப்படத்திலும் ஜெர்மனியிலும் மட்டும் முடிந்துபோய்விடவில்லை. உலகப் போர் முடிந்து 75 ஆண்டுகளாகிவிட்ட பிறகும் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் மேற்கண்ட அம்சங்களே மக்களைக் கட்டிப்போட்டுள்ளன என்பதைப் போகிற போக்கில் ஜோஜோ உணர்த்திச் செல்கிறது.

யூதர்கள் பேய்கள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று நம்பும் ஜோஜோதான் கடைசிவரை எலிசாவின் பாதுகாவலனாக இருக்கிறான். என்னதான் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை இஸ்ரேல் அழிக்க முயன்றாலும், இஸ்ரேலில் வாழும் யூத மக்களில் பலரே இன அழிப்புப் போருக்கு எதிரான மனநிலையோடுதான் உள்ளனர்.

குருட்டு தேசியவாதம், பிரிவினை, அழிப்பு சார்ந்த நம்பிக்கைகள் இந்த பூமியில் சிறிதுகாலம் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால், நிலைத்திருக்க முடியாது. இந்த பூமிப்பந்து என்றைக்கும் நீடித்திருக்க ஒரே காரணம் மனிதம்தான். அந்த மனிதத்தைதான் போகிற போக்கில் ஜோஜோ நமக்கு உணர்த்திவிட்டுச் செல்கிறான். இன்றைய ஆட்சியாளர்களுக்குப் போதிக்கப்பட வேண்டிய முக்கியப் பாடமாக, அதே மனிதம்தான் இருக்கிறது. ஜோஜோ ஒரு மனிதத்தின் வழிகாட்டி. பேரின அழிவுகளின் வரலாற்றை அறிய முற்படுபவர்கள், அதன் ஆணிவேரை அறிய வேண்டுமானால் கொஞ்சம் ஜோஜோவுடன் பேசிப் பாருங்கள்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: sram72451@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x