

புதுடெல்லி: விஜய்யின் ‘ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன.15) விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
தவெக தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதற்கான தொடக்ககட்ட பணிகள் நடந்து வந்தன. டிக்கெட் முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
ஆனால், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் இ.சி.அகர்வாலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தணிக்கை வாரியத்தின் வாதத்தை கேட்காமல் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதனிடையே, தங்கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்று தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் அம்ரீஷ் குமார் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன.15) விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.