

அடுத்து படம் இயக்கவிருப்பது எப்போது என்ற கேள்விக்கு தனுஷ் பதிலளித்துள்ளார்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சுரமுடு, ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கர’.
ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் ”அடுத்து எப்போது படம் இயக்க திட்டமிட்டு இருக்கிறீர்கள்” என்ற கேள்வி தனுஷிடம் எழுப்பப்பட்டது. அதற்கு தனுஷ், “மூன்று இயக்குநர்கள் தங்களுடைய கதையுடன் எனக்காக பொறுமையாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். அதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும்.
இந்த இரண்டுக்கும் நடுவே ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படமும் இருக்கிறது. பின்பு ‘வடசென்னை 2’ படத்தினையும் முடிக்க வேண்டும். இதன் மூலம் ‘வடசென்னை 2’ படம் எப்போது வெளியாகும் என்பதற்கான காலம் உங்களுக்கு புரிந்திருக்கும். எனவே, இவை எல்லாம் முடிக்க எனக்கு சில ஆண்டுகள் தேவைப்படும். அதற்குப் பிறகு தான் இயக்கம் குறித்து சிந்திக்க முடியும்” என்று பதிலளித்துள்ளார் தனுஷ்.