

சென்னை: நடிகர் பார்த்திபனின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர்கள் திரையில் சில புகைப்படங்களைப் போட்டுக் காட்டி அதுகுறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி கேட்டனர்.
அதில் நடிகை த்ரிஷாவின் படமும் இடம்பெற்றது. அதுகுறித்து கருத்து தெரிவித்த பார்த்திபன், “இந்த குந்தவையை வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது. அது நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது சிறந்தது” என்று பேசியிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் பார்த்திபனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார்.
தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் ஒரு தகவலைத் தெரிவித்தனர். ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், அவருடைய உதவியாளர் மூலமாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், கடைசி நேரத்தில் என்னுடைய பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர்.
கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக வெளிப்படுத்த மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள், யாரைக் குறித்துப் பேசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தைப் பற்றியே அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டும்” இவ்வாறு த்ரிஷா தெரிவித்துள்ளார்.