

தமிழில், கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம், லப்பர் பந்து, மாமன் உள்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை சுவாசிகா. சமீபத்தில் அபுதாபி சென்றிருந்த இவர், பிப்.28-ம் தேதி கொச்சி திரும்புவதற்காக விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகளுடன் சுவாசிகாவும் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை கொச்சி திரும்பிய அவர் கூறும்போது, “விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டேன்.
அங்கு யாரும் பீதி அடையவில்லை. வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்குக் கொஞ்சம் பயம் இருந்தது” என்றார். பின்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பிப்.28 -ம் தேதி நான் விமான நிலையத்தில் இருந்தபோது ஏவுகணை தாக்குதல் நடந்தது.
மதியம் 1 மணிக்குள் விமான நிலையம் மூடப்பட்டது. சுற்றிலும் குழப்பம். யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பின்னர்தான் ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வரத் தொடங்கியது. அடுத்த நிமிடம், எங்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்.