

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரையரங்கின் இருள் அகன்று திரை திறக்காத முன்பே, ‘ஜனநாயகன்’ என்ற படைப்பின் உயிரைப் பறித்து, அதைக் கள்ளத்தனமாக சமூக வலைத்தளங்களில் அறுத்தெறிந்து, அதன் வருங்காலத்தைக் காரிருளில் மூழ்கடித்த இந்த ஈனச் செயல், சாதாரண சட்ட விதி மீறல் அல்ல, காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிரான திட்டமிட்ட ஒரு வன்முறை.
அந்த வன்முறை தான் ‘ஜனநாயகம்’ என்னும் இரையை விழுங்கியது. இது, கலையை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களின் உழைப்புக்கு எதிரான கொடூர யுத்தம். மனித மனசாட்சிக்கு எதிரான ஒரு நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒரு திரைப்படம் என்பது சில மணித்துளிகள் கண்முன் ஓடும் கற்பனை கதையல்ல. அது ஆயிரம் கனவுகளின் கூட்டுத்தொகை.
ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் வியர்வை, உழைப்பு, பல குடும்பங்களின் வாழ்வாதாரம், ஒரு சமுதாயத்தின் உணர்வு அனைத்தும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் திரைத்துறை என்பது வெறும் பொழுதுபோக்கு தொழில் அல்ல. அதை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை வழியும், சிந்தனைகளை விதைத்து சமூக மாற்றங்களை உருவாக்கும் வலிமைமிக்க தளமும் ஆகும்.
அத்தகைய துறையை சுய லாபம், காழ்ப்புணர்ச்சி அல்லது பழிவாங்கும் மனநிலையால் களங்கப்படுத்த முயல்பவர்கள், சட்டத்தையும், சமூக நெறிகளையும் மீறுபவர்கள். இச்செயலை ஆற்றியவர்கள் எவராக இருப்பினும், அவர்களது அடையாளம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நீதித் துறையின் தண்டனை அவர்களைத் தாக்க வேண்டும். அது ஒரு எடுத்துக் காட்டாக நிலைத்திருக்க வேண்டும்.
ஏனெனில் இது ஒரே ஒரு திரைப்படம் சார்ந்த குறை கூறல் அல்ல; இது ஒரு ஒட்டுமொத்த துறையின் மாண்புக்கே விடப்படும் அறைகூவல். திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், கலைஞர்களும், தொழிலாளர்களும் இணைந்து இத்தகைய செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டுகிறோம். இந்த முயற்சியில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையான ஒத்துழைப்புடன் இணைந்து செயல்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.