

சென்னை: கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சதீஷ் எம்.பி. தயாரிக்கும் 9-ஆவது தயாரிப்பான 'வாணவேடிக்கை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வாணவேடிக்கை’. இப்படத்தின் தொடக்க விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல்.கே.சதீஷின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடித்து முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார்.
'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்களை இயக்கிய திரு இப்படத்தை இயக்குகிறார். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் மோகன் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இப்படத்தில் சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குநர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், 'கும்கி' அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அர்வி ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். பிரேம்குமார் படத்தொகுப்புப் பணிகளையும், ராஜ்கமல் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
முழுக்க முழுக்க சென்னையிலேயே படமாக்கப்பட உள்ள இத்திரைப்படம் குறித்து இயக்குனர் திரு பகிர்ந்துகொண்டதாவது: “இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு புதிய பரிமாணத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இது தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசப் பிணைப்பை, எமோஷனல் மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் விவரிக்கும் ஒரு அழகான குடும்பத் திரைப்படமாக உருவாகவுள்ளது. படம் குறித்த மற்ற சுவாரசியமான அறிவிப்புகள் அனைத்தும் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார்.