

சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிச.11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி நிறைவடைந்தது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்திய இந்த 23-வது பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்பது பொது உடைமை, மெட்ராஸ் மேட்னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், வேம்பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் நடித்த சசிகுமாருக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது, ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்துக்காக லிஜோமோல் ஜோஷுக்கு வழங்கப்பட்டது. சிறந்த தமிழ்ப்படத்துக்கான விருது ராமின் ‘பறந்து போ’ படத்துக்கு வழங்கப்பட்டது.
மற்ற விருது விவரம்: இரண்டாவது சிறந்த படம் - டூரிஸ்ட் ஃபேமலி (அபிஷன் ஜீவிந்த்), சிறப்பு ஜூரி விருது- காளி வெங்கட் (மெட்ராஸ் மேட்னி), சிறப்பு ஜூரி விருது - ஷீலா ராஜ்குமார் (வேம்பு), சிறந்த ஒளிப்பதிவு - எஸ்.பாண்டி குமார் (அலங்கு) சிறந்த எடிட்டர் - நாகூர் ராமச்சந்திரன் (மாயக்கூத்து).
விழாவில் எம்ஜிஆர் அரசினர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தயாரித்த ‘கற்பி’ குறும்படத்துக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், ஸ்பெயின் நாட்டின் துணை தூதர் ஆண்டனி லோபோ, அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.