

இயக்குநர் அட்லி தனக்கு தந்த இன்ப அதிர்ச்சி சம்பவம் ஒன்று குறித்து குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.
சாய் அபயங்கர் இசையமைத்து, பாடலில் தோன்றியுள்ள ‘பவழமல்லி’ தனி சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் சாய் அபயங்கர். அவரிடம் அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் படத்தின் பணிகள் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு சாய் அபயங்கர், ”அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் இசையமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அட்லி அண்ணாவை பற்றி இங்கு சொல்ல வேண்டும். அவர் என்னை முதன்முதலில் சந்தித்தபோது, நான் ஒரு படத்தில் கூட ஒப்பந்தமாகவில்லை. அட்லி அண்ணாவுக்கு ஒரே ஒரு பாடலை மட்டுமே போட்டு காட்டினேன். அடுத்த நொடியே “எனது அடுத்த படத்துக்கு நீ இசையமைக்க முடியுமா?” என்று கேட்டார். அவர் சொன்னவுடன் நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.
அட்லி அண்ணா எனக்கு அளித்த நம்பிக்கையே என் வாழ்க்கையை உயர்த்தியிருக்கிறது. அவர் மீது பெரும் மரியாதை வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சாய் அபயங்கர்.
அல்லு அர்ஜுன் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி எதிலுமே அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை. இந்தப் பேச்சின் மூலம் அவரே இசையமைக்கிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.