

சென்னை: ‘ஜனநாயகன்’ முடக்கப்பட்டது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, “சாரி... நான் இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை” என நடிகர் ரஜினிகாந்த பதிலளித்தார். அதோடு, இளைஞர்களே தயவுசெய்து குடிப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், “நடிகர்கள் மீது அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு மூத்த நடிகராக என்ன சொல்ல விரும்புகிறீகள், அதனுடன் இளைஞர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இளைஞர்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிபட்டால் அவர்களுக்குத்தானே காயம் ஏற்படும்.
படிக்கின்ற காலக்கட்டத்தில் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த நேரத்தை அவர்கள் விட்டுவிட்டார்கள் என்றால் அவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். இதை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தயவுசெய்து குடிப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகாகி விடாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிடும். அவ்வாறு உங்களுக்கு நண்பர்கள அமைந்தால், அவர்கள் அருகில் கூட போகாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், “‘ஜெயிலர் 2’ படத்திற்கான ஷூட்டிங் இன்னும் இரண்டு மூன்று நாட்களே உள்ளது. அந்தப் படத்தின் பணிகள் விரைவில் முடிவடையும். என்னுடன் கமல் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்” என்று தெரிவித்தார்.
மேலும், ‘ஜனநாயகன்’ படம் முடக்கப்பட்டது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, “சாரி... நான் இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை” என பதிலளித்தார்.