

நடிகரும், தவெக தலைவருமான விஜய், தனது கடைசிப்படம் என அறிவித்த ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான காட்சிகள் காரணமாக அப்படத்துக்குத் தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் அப்படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த மறு ஆய்வுக் குழுவினர் இன்னும் சான்றிதழ் வழங்கவில்லை. இந்நிலையில் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானதால் படத்தயாரிப்பு குழு அதிர்ச்சியடைந்துள்ளது. கோவையில் இப்படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக் ஷன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பாக அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.