

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கான ‘ஜி.டி.என்’ ஆக.7-ல் வெளியாக இருக்கிறது. ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். நடிகர் ‘பைவ் ஸ்டார்’ கிருஷ்ணா என்கிற கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார்.
‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர்.மாதவன், சரிதா மாதவன் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் பற்றி இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமாரிடம் பேசினோம்.
ஜி.டி.நாயுடு பயோபிக் பண்ணணும்னு எப்படி தோணுச்சு?
“ஸ்கூல்ல அவரை பற்றி பாடப்புத்தகத்துல படிக்கும்போதே அவர் மேல ஈர்ப்பு இருந்தது. அப்புறம் அடுத்தடுத்த காலகட்டங்கள்ல அதை மறந்தாச்சு. சில வருடங்களுக்கு முன்னால அவரை பற்றிய புத்தகத்தை வாங்கி படிச்ச பிறகுதான், இவரோட பயோபிக்கை கண்டிப்பா பண்ணணும்னு தோணுச்சு.
ஏன்னா, அவர் வாழ்க்கையில அவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கு. அவரைப் பற்றி கேள்விப்படாத விஷயங்கள் நிறைய இருந்தது. அவர் கண்டுபிடிப்புகளை விட, அவர் நோக்கங்கள் உயர்ந்தவை. அவர் தமிழ்நாட்டோட பெருமை. இந்தியாவோட பெருமை. ஆட்டோமொபைல் துறையில அவர் சாதித்த விஷயங்கள்ல இருந்து எல்லாமே எனக்கு வியப்பா இருந்ததால பயோபிக் எண்ணம் உருவாச்சு.”
ஜி.டி.என் குடும்பம் எப்படி ஏத்துக்கிட்டாங்க?
“கரோனா காலகட்டத்துல வீட்டுல சும்மா இருக்கும்போது, ஜி.டி.என் வாழ்க்கைக் கதையை திரைக்கதையா எழுதினேன். ‘வாய்ப்பு கிடைக்குதோ, இல்லையோ, நம்ம வேலையை முடிச்சிடலாம்’னு உட்கார்ந்தேன். முடிச்சுட்டு என் நண்பர் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்கிட்ட சொன்னேன்.
அவர் அதை படிச்சுட்டு ஒரு தயாரிப்பாளர் கிட்ட கூட்டிட்டுப் போனார். அங்கதான், இப்ப இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிற அரவிந்த் கமலநாதன் கதை கேட்கிற டீம்ல இருந்தார். அவருக்கு ஜி.டி. நாயுடு குடும்பம் ரொம்ப நெருக்கம். உடனே அவர் குடும்பத்தை சந்திச்சேன். அவங்க குடும்பத்துல கதையை கேட்டுட்டு, “நீங்க எழுதியிருக்கிறது ரொம்ப பிடிச்சிருக்குன்னாங்க. அந்த வார்த்தை பெரிய நம்பிக்கையை கொடுத்தது.”
ஜி.டி.நாயுடுவா நடிக்க மாதவன் எப்படி சம்மதிச்சார்?
“என்னை ஜிடிஎன் குடும்பத்துக்கிட்ட அழைச்சுட்டு போனவர், நடிகர் மாதவனுக்கும் நண்பர். அவரே இதுல மாதவன் நடிச்சா நல்லாருக்கும்னு சொன்னதும் எங்களுக்குச் சந்தோஷம். ஆனா, அவரு சம்மதிப்பாரா அப்படிங்கற சந்தேகம் இருந்தது.
ஏன்னா, அதுக்கு முன்னாலதான் அவர் ‘ராக்கெட்ரி’ படத்தை முடிச்சிருந்தார். அதுவும் பயோபிக். திரும்பவும் ஒரு வாழ்க்கை கதையில நடிப்பாரான்னு தயக்கம் இருந்தது. ஆனா, அவர் ஜி.டி.என் பெயரை கேட்டதுமே ஓகே சொல்லிட்டார். படத்துல அவர் வாழ்ந்திருக்கார். படத்துல அவர் உழைப்பு தெரியும்.”
பயோபிக் படம்னா, அதுக்கு முன் தயாரிப்பு வேலைகள் அதிகமா இருக்குமே? எப்படி தயாரானீங்க?
“எல்லா படத்துக்குமே முன் தயாரிப்பு வேலைகள் அதிகமாகத்தான் இருக்கும். அதைவிட இதுக்கு கொஞ்சம் அதிகம். ஜி.டி.நாயுடு, தான் சந்தித்த விஷயங்கள், எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வாழ்க்கை பதிவுகள் எல்லாத்தையும் டைரி எழுதற மாதிரி எழுதி, புவுண்ட் பண்ணி வச்சிருக்கார்.
நான் எழுதிய திரைக்கதையை அவங்க குடும்பத்தினர் ஏத்துக்கிட்டதும், ஜி.டி.நாயுடு கைப்பட எழுதிய பதிவுகளை என்கிட்ட கொடுத்தாங்க. அது படத்துக்கு இன்னும் அதிகமா உதவுச்சு. அவர் பயன்படுத்திய கார், பைக் எல்லாவற்றையும் அப்படியே படத்துல பயன்படுத்தி இருக்கோம். அவர் எந்த இடத்துல பஸ் ஸ்டாண்டை நிறுவினாரோ அங்க படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். இதெல்லாம் படத்துல ரொம்ப அழகா வந்திருக்கு.”
ஜி.டி.என் வாழ்க்கையில எந்த பகுதியை படமா பண்ணியிருக்கீங்க?
“அவரோட மொத்த வாழ்க்கையை ஒரு படத்துக்குள் சொல்ல முடியாது, அதனால அவர் வாழ்க்கையில சந்திச்ச முக்கியமான போராட்டம் ஒன்னு இருக்கு. அதைதான் சொல்லியிருக்கோம். அதுல இருந்து அவர் போராடி எப்படி தாண்டி வர்றார்ங்கறதுதான் இந்தப் படத்தோட தனித்தன்மைன்னு சொல்வேன்.”
டிரெய்லர்ல பெரியார், எம்.ஆர்.ராதா எல்லாம் வர்றாங்களே...
“பெரியாரும் ஜி.டி.என்-னும் நெருங்கிய நண்பர்கள். பெரியாரோட வாழ்க்கையில எல்லா விஷயத்துலயும் ஜி.டி.என் கூட இருந்திருக்கார். அதே போல எம்.ஆர்.ராதாவும் அவருக்கு நண்பர்தான். அதனால அவங்க வர்ற காட்சிகளும் படத்துல இருக்கு. ஆனா, அரசியல் விஷயங்கள் கதையில இல்லை.
பிரிட்டீஷ் காலகட்டத்துல நடக்கிற கதை இது. அந்த காலகட்டத்தை எப்படி கொண்டு வந்திருக்கீங்க?
“அதுக்கு தனியாக ஒரு ரிசர்ச் டீமே வேலை பார்த்தாங்க. அந்த கால கட்டத்துல என்ன மாதிரியான துணிகளைப் பயன்படுத்தினாங்க, ஹேர் ஸ்டைல் எப்படி இருந்தது, அப்ப என்ன மாதிரி வாகனங்கள் இருந்ததுன்னு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணியிருக்கோம். படம் பார்க்கும்போது அந்தக் காலகட்டம் தெளிவா தெரியும்.
அதேபோல கதையோட போக்குக்காக திரைக் கதையில சின்ன மாற்றங்கள் பண்ணியிருக்கோம் அதாவது 1945-ல் நடந்ததை 1936-ம் ஆண்டுக்கு எடுத்துட்டு வந்துருக்கோம். இது மாதிரி சில மாற்றங்கள் இருக்கும். ஆனா அதெல்லாம் உண்மைதான்”
சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், மீரா ஜாஸ்மின் அப்படின்னு நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்களே..?
“இந்தக் கதைக்கு தேவைப்பட்டாங்க. சத்யராஜ், ஜி.டி.என்னோட நலம் விரும்பியா, அபிமானியா வர்றார். அவர் படத்துல அறிமுகமாகிற காட்சியே அவ்வளவு ரசனையா இருக்கும்.அதே போல ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கு. ஹிட்லரை, ஜி.டி.என் நேர்ல சந்திச்சு இருக்கார். அந்தக் காட்சிகள் ரொம்ப அழகா வந்திருக்கு.
ஜிடிஎன், ஹிட்லரை புகைப்படம் எடுத்திருக்கார். இப்ப இணையத்துல தேடினா கூட அந்தப் புகைப்படம் கிடைக்குது. இதுல நான் என்.எஸ்.கிருஷ்ணனா நடிச்சிருக்கேன். எனக்கான திரை நேரம் குறைவு தான். இதேபோல சின்ன சின்ன சர்பிரைஸ் கதையில இருக்கும்.”