

சென்னை: இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய இளையராஜா ஐயாவிற்கு. ‘கருப்பு’ திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. 50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.
உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கருப்பு படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
கருப்பு: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் இதில் நடித்துள்ளார். சில சிக்கல்களை கடந்து கடந்த வாரம் இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியானது.