மே 15-ம் தேதி வெளியாகிறது ‘கருப்பு’?
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை மே 15-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிக்காக பல்வேறு படக்குழுவினர் காத்திருந்தனர். அந்த தேதியினை வைத்து தங்களுடைய படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய திட்டமிட்டு இருந்தார்கள். தற்போது ஏப்ரல் 23-ம் தேதி தேர்தலும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 4-ம் தேதிக்கு பிறகு தங்களுடைய படத்தினை எப்போது வெளியிடலாம் என்ற ஆலோசனையில் படக்குழுவினர் இறங்கியிருக்கிறார்கள். இதில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை மே 15-ம் தேதி வெளியிடலாமா என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டு இருக்கிறது. இந்த தேதியினை வைத்து தங்களுடைய விநியோகஸ்தர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்கள்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
