

சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென்று நடிகை ஜோதிகா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28-ம் தேதி போராட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர். மேலும், மாணவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தேசம் முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் நடிகை ஜோதிகா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான். ராஜினாமா செய்யுங்கள். நான் மாணவர்களுடன் நிற்கிறேன். இதில் நமது தேசத்தின் எதிர்காலம் உள்ளது. ஜனநாயக இந்தியாவுக்கான பொறுப்புணர்வு கொண்டு நிற்கிறேன். கல்வி சீர்திருத்தத்துக்காக நிற்கிறேன்.
தாய்மார்களாக எங்களது பிள்ளைகளை சோனம் வாங்சுக், அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ் போல வளர்க்க விரும்புகிறோம். வெளிப்படைத்தன்மையுடன் உள்ள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரை எண்ணி பெருமை கொள்கிறேன். நாங்கள் இந்தியா என்பதை நீங்கள் ஒன்று சேர்ந்து நிரூபித்துள்ளீர்கள். அழுத்தத்தை தகர்த்தமைக்கு நன்றி. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றிய சிஜேபி-க்கு நன்றி” என்று ஜோதிகா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இப்போது அந்த வரிசையில் ஜோதிகாவும் இணைந்துள்ளார்.