

இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையால், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது. அங்கும் அப்பிரச்சினை முடிவடையவில்லை. தற்போது நீதிமன்றத்திடம் வழக்கை வாபஸ் பெற்று, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தது தயாரிப்பு நிறுவனம். அந்த மறுதணிக்கையே இன்று சென்னையில் நடைபெறுகிறது. இன்று நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் முடிந்தவுடன்தான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த வதந்திகள் அனைத்துமே மறுதணிக்கை முடிந்தவுடன் முடிவுக்கு வரும் என்பது உறுதி.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ‘ஜனநாயகன்’, ‘டாக்சிக்’ ஆகிய படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருபப்தால், இந்நிறுவனம் கடும் சிக்கலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.