

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், ‘ஜனநாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி என பலர் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9-ம் தேதி வெளியாக இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்திருப்பதால் ‘ஜனநாயகன்’ அவருடைய கடைசி திரைப்படமாகும். இதனால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் இதில் இருந்து ஏற்கெனவே 3 பாடல்கள் வெளியான நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர்கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று (டிச. 27) நடைபெறுகிறது.
இதற்காக நடிகர் விஜய், தனி விமானம் மூலம் மலேசியா சென்றார். அவருக்கு அங்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற் பதற்காக விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா, இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், அட்லி, பிரபுதேவா, நடன இயக்குநர்கள் உள்பட பல திரைபிரபலங்கள் மலேசியா சென்றுள்ளனர்.
அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பாடகர்கள் கிரிஷ், ஹரீஷ் ராகவேந்திரா, எஸ்.பி.பி.சரண், டிப்பு, பாடகிகள் அனுராதா ராம், சுஜாதா மோகன் ஆகியோரும் சென்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஏராளமான ரசிகர்களும் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளனர்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகிறது. சுமார் 80 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள். விஜய்யுடன் ஆடும் கடைசி நடனமாக இது இருக்கும்” என்றார்.