

சென்னை: ஜனநாயகன் படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், திரையரங்குகளில் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் இப்படம் சட்டவிரோதமாக வெளியானது.
இந்நிலையில், இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் இந்த படத்தை ஒளிபரப்ப தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன். புரொடக் ஷன்ஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், ‘தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கும் முன்பாகவே இணையதளத்தில் ஜனநாயகன் திரைப்படம் கசியவிடப்பட்டுள்ளது.
மேலும், கோவையில் கேபிள் டிவியிலும் இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை சட்டவிரோதமாகஇணையதளங்கள், கேபிள் டிவிக்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஜனநாயகன் படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக ஒளிபரப்பக் கூடாது என இடைக்காலத்தடை விதித்து
நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.