

சென்னை: கடனை திரும்ப செலுத்தும் வரை நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடனாக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்றால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வரும் டிசம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்து ஆட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில்,தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துகளை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
அந்தத் தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்து ஆட்சியர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, ஞானவேல் ராஜா எப்போது கடன் தொகையை செலுத்துவார் என பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சொத்து ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் பலமுறை வாய்ப்பளித்தும் ஞானவேல்ராஜா கடனை திருப்பி அளிக்கவில்லை எனக்கூறினார். எனவே, அவரது சொத்துகளை முடக்க வேண்டுமென வாதிட்டார்.
ஞானவேல் ராஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மூன்று கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும் மீதமுள்ள தொகைக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஞானவேல்ராஜாவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே பல வாய்ப்புகள் அளித்துள்ள நிலையில் மீண்டும் வாய்ப்பளிக்க தேவையில்லை எனவும் பணம் கொடுத்தவர்கள் அதனை திரும்பப் பெற நீண்ட காலமாக காத்திருப்பதாகவும் கூறினர். நீதிமன்ற உத்தரவிட்ட பணத்தை திரும்பச் செலுத்த ஞானவேல் ராஜா எந்த வித தீவிர முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்துள்ளதாகவும் அதனை ஞானவேல் ராஜா தவறாக பயன்படுத்தியுள்ளதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே, கடன் தொகையை திரும்பச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை அனைத்து தளங்களிலும் வெளியிடக்கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.