

சென்னை: தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குரங்குடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பன் வகை குரங்குடன் தான் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோவை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலானது.
இந்தியாவில் ‘லார் கிப்பன்’ உட்பட எந்தவொரு கிப்பன் அல்லது குரங்கு வகையையும் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.
இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வகையான உள்நாட்டு குரங்கினங்களும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலில் வருகின்றன. கடந்த 2022-ம் ஆண்டு இச்சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, சர்வதேச அளவில் அருகிவரும் மற்றும் பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களை வணிக ரீதியாக வாங்குவதும், விற்பதும், வீடுகளில் வளர்ப்பதும் இந்தியாவில் குற்றமாகும்.
இந்நிலையில், நடிகர் விக்ரம் அரிய வகை குரங்குடன் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, நடிகர் விக்ரம் குரங்குடன் இருந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற நிலையில், ‘தடை செய்யப்பட்ட அரிய வகை குரங்கு எப்படி நடிகர் விக்ரம் கையில் இருந்தது. இந்த குரங்கு கடத்திவரப்பட்டதா? யாரிடமிருந்து இந்த குரங்கு நடிகர் விக்ரமுக்கு கிடைத்தது?’ என வனத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வனத்துறை சார்பில் விக்ரமுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.