

இயக்குநர் அஜய் ஞானமுத்து |ராகவா லாரன்ஸ்
அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அருள்நிதி நடித்துள்ள ‘டிமாண்ட்டி காலனி 3’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து.
பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் அஜய் ஞானமுத்து. இதில் நாயகனாக நடிக்க லாரன்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்தும் முடிவானவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘புல்லட்’ படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள ‘காஞ்சனா 4’ படமும் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படத்தின் பணிகளையும் முடித்துவிட்டு அஜய் ஞானமுத்து படத்தினை லாரன்ஸ் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.