

நடிகர் அர்ஜுனுடன் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் | நடிகை ப்ரீத்தி முகுந்தன்
அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் மே 28-ல் வெளியாகவுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பங்காற்றியுள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் அர்ஜுன் கூறும்போது, “நான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம்.
நான் ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். நடிகை அபிராமியுடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது, அவர் மலையாளம் மட்டும்தான் பேசுவார். இப்போது தமிழில் நன்றாகப் பேசி அசத்துகிறார்.
அவர் நடிகை மட்டுமல்ல, பாடகியும் கூட. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல் ப்ரீத்தி முகுந்தனைப் பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார்” என்றார்.
இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் பேசும்போது, "இது ஆக்ஷன் படம்தான். ஆனால் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தைத் தொடர்புப் படுத்திக் கொள்வார்கள். சமூகத்துக்குத் தேவையான பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம்” என்றார்.