

நாயகனாக நடிக்க மாட்டேன் என்று அனிருத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தை நாயகனாக நடிக்க வைத்துவிட வேண்டும் என்று பல்வேறு இயக்குநர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதுவுமே திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. இதனிடையே சமீபத்தில் அளித்த பேட்டியில் நாயகனாக நடிக்க மாட்டேன் என்று உறுதிபட அவர் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அனிருத், “லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் நாயகனாக நடியுங்கள். ஆனால், அதனை நான் எப்போதும் பண்ண மாட்டேன். எனக்கு இசை தான் மிகவும் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளில் ரசிகர்கள் பெரிய உயரத்தினை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இசையில் இன்னொரு ரவுண்ட் போக வேண்டும். அதற்கு 15 வருடங்கள் போதாது.
நான் இசையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ஆகையால் இப்போதைக்கு இசை சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ப்ரோமோ ஆகியவற்றில் மட்டுமே தோன்றுவேன்” என்று தெரிவித்துள்ளார் அனிருத்.
‘ஜெயிலர் 2’, ‘தி பாரடைஸ்’, ‘எல்.ஐ.கே’, ‘ரஜினி – கமல் இணையும் படம்’, ‘ஜனநாயகன்’, ‘டி சி’, ’அரசன்’, ‘ரஜினி173’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.