

இசைத்துறையில் ஏ.ஐ டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்துவதாக இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் சொன்னார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள், டிச. 25 ம் தேதி வெளிவருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள பெண் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. இந்தப் படம் நம் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடுவதற்கு முன் அவர் குரலில் ட்ராக் போல ஏ.ஐ.-யில் எடுத்தோம்.
அதைக் கேட்டு தனுஷே ஆச்சரியப்பட்டார். டெக்னாலஜி எப்போதும் தவறில்லை. நாம் எப்படி பயன்படுத்து கிறோம் என்பது தான் முக்கியம். இசைத்துறையில் ஏ.ஐ.டெக்னாலஜி அதிக ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்துக்கு இசை அமைத்த பிறகு நிறைய பக்தி படங்களுக்கு இசை அமைக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பக்தி பாடல் வாய்ப்புகளும் வருகின்றன. ஐயப்பன் பாடல் ஒன்றை எழுதி இசை அமைத்துள்ளேன். அது விரைவில் வெளியாகும். ‘நாகினி’ தொலைக்காட்சித் தொடருக்கு டைட்டில் பாடல் அமைத்துள்ளேன்.
சர்தார் 2, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், புஷ்கர் காயத்ரி இயக்கும் படம், கன்னடத்தில் ஒரு படம், மாதவன், கங்கனா நடிக்கும் பான் இந்தியா படம் என சுமார் 10 படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். பிசியாக இருப்பதை ரசிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவ்வாறு சாம் சி.எஸ் கூறினார்.