

சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்த பின்பும், படங்களின் வெற்றிகளை கணிக்க முடியாது என்று ‘கங்குவா’ தோல்வியும், ‘கருப்பு’ வெற்றியும் தனக்கு உணர்த்தின என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், ‘முழு நம்பிக்கையுடன் உறுதியுடன் ஒரு படத்துக்கு (கங்குவா) கிட்டத்தட்ட 200 நாட்கள் வேலை செய்தோம். அந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறாமல் தோல்வியடைந்தது. 45 நாட்கள் வேலை செய்த ஒரு படம் (கருப்பு) அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக மாறுகிறது. இங்கே நாம் அறிந்து கொள்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
நான் அனைத்தையும் அறிந்து கொண்டேன் என சொல்ல மாட்டேன். சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் நான் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து ‘ரோலக்ஸ்’ படம் பற்றி பேசிய சூர்யா, “லோகேஷ் கனகராஜ் என்ன செய்ய இருக்கிறார் என எனக்கு தெரியாது. அவர் ஏற்கெனவே அல்லு அர்ஜுன் படத்தில் பிஸியாக இருக்கிறார். ‘விக்ரம் 2’ படமும் அவருக்கு இருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில் ‘ரோலக்ஸ்’ படத்தை எழுதிக்கொண்டு இருக்கிறார் என்றும் அறிந்தேன். அது எப்போது நடக்கும் என்று காலம்தான் பதில் சொல்லும்.
‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவனுடன் பணியாற்றிய படம் நிறைவடைந்து விட்டது. அது எங்களின் சொந்த தயாரிப்பு. வருடத்தின் இறுதியில் படம் வெளியாகும் என்று தெரிவித்தார்.