

நடிகர் அபிமன்யு திலகன்
ஆர்.பன்னீர் செல்வம் இயக்குநராக அறிமுகமான திரைப்படம், ‘ரேனிகுண்டா’. ஜானி, சனுஷா, நிஷாந்த், சந்தீப், தமிழ், தீப்பெட்டி கணேசன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்தார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் 2-ம் பாகம் `ரேனிகுண்டா 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
பன்னீர்செல்வம் இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள், இதிலும் நடிக்கின்றனர். ஷாலினி நிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மறைந்த மலையாள நடிகர் திலகனின் பேரன் அபிமன்யு திலகன் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இது பற்றி அபிமன்யு திலகன் கூறும்போது, “மார்கோ படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு இந்த வாய்ப்பு வந்தது. இதில் 20 நாட்கள் என் காட்சிகள் படமாக்கப்பட்டன. 95 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில் நான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறேன். தமிழ் வசனங்களைப் பேசி நடிக்க இயக்குநர் பன்னீர்செல்வம் உதவினார்” என்றார்.