

சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘போர் தொழில்’. நிகிலா விமல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படம், ஜூன் 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. இ4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் பற்றி சரத்குமார் கூறியதாவது: இது பரபரப்பான த்ரில்லர் படம். இயக்குநர் கதை சொல்லும்போதே பிடித்திருந்தது. இதில் மூத்த போலீஸ் அதிகாரியாக நானும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த அதிகாரியாக அசோக் செல்வனும் நடித்திருக்கிறோம். இருவரும் தொடர் கொலைகளைச் செய்யும் குற்றவாளியைப் பிடிப்பதுதான் கதை. கொலையைக் கண்டுபிடிக்கும் விதம் வித்தியாசமானதாக இருக்கும். எப்படி புலனாய்வு செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் கேரக்டர் எனக்கு. நான் போலீஸ் அதிகாரியாக சில படங்களில் நடித்திருந்தாலும் இதன் திரைக்கதை அதிலிருந்து மாறுபட்டு இருக்கும். 14 நாட்களில் நடக்கும் சம்பவங்கள்தான் படம். பெரும்பாலான காட்சிகள் இரவில்தான் படமாக்கப்பட்டன. இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.
இவ்வாறு சரத்குமார் கூறினார். அசோக் செல்வன், இயக்குநர் விக்னேஷ் ராஜா உடனிருந்தனர்.