மகளிர் மட்டும் படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தொடக்கம்

மகளிர் மட்டும் படப்பிடிப்பு நிறைவு: இறுதிக்கட்டப் பணிகள் தொடக்கம்
Updated on
1 min read

ஜோதிகா நடித்து வந்த 'மகளிர் மட்டும்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

'குற்றம் கடிதல்' படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் 'மகளிர் மட்டும்' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரம்மா. சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வரும் படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சுமார் 80% படப்பிடிப்பு முடிந்தவுடன், இறுதிக்கட்டப் பணிகளைத் துவக்கியது படக்குழு. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சமீபத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் முடித்து, மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் பிரம்மா, "பெண்களைச் சார்ந்து இப்படத்தின் கதை நகரும். நமக்குள் பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய வேலை இது என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளோம். அதை உடைப்பது போன்று ஜோதிகாவின் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in