

திருட்டு விசிடி வேலை செய்யும் நபர்கள் யார் என்பதை இன்னும் 2 வாரத்தில் அறிவிப்பேன் என்று விஷால் தெரிவித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'துப்பறிவாளன்'. அரோல் குரலி இசையமைத்துள்ள இப்படத்தை விஷால் தயாரித்துள்ளார். நந்தகோபால் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்திருக்கிறார். 'துப்பறிவாளன்' படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் மிஷ்கின் , தயாரிப்பாளர் நந்தகோபால் , இசையமைப்பாளர் அரோல் கொரொலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , இயக்குநர்கள் சுசீந்திரன் , பாண்டிராஜ் , திரு, நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் விஷால் பேசியதாவது:
நானும் இயக்குநர் மிஷ்கினும் 8 வருடமாக ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது 'துப்பறிவாளன்' என்ற படம் மூலமாக நிஜமாகியுள்ளது.
மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். 'துப்பறிவாளன்' படத்தில் எனது திரையுலக வாழ்வின் மிகச் சிறந்த சண்டைக் காட்சிகளைப் பார்க்கலாம். ஒரு தயாரிப்பாளராகவும் , நடிகராகவும் எனக்கு 'துப்பறிவாளன்', ’பாண்டியநாடு' படத்தை விட முக்கியமான படமாகும். நானும் , பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது.
நான் திருட்டு விசிடி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியும். அவர்கள் யார் , அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன். நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன்.
ஒட்டுமொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.யார் அவர்களுக்கு 100-வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்
இவ்வாறு விஷால் பேசினார்.