“படம் முழுவதும் ஆக்ஷன் மோடிலேயே இருக்கும்” - ‘கஸ்டடி’ குறித்து வெங்கட் பிரபு
சென்னை: ‘கஸ்டடி’ படம் முழுவதும் ஆக்ஷன் மோடிலேயே இருக்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘கஸ்டடி’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா - யுவன் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படம் வரும் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது: " ‘கஸ்டடி’ என்னுடைய முதல் தெலுங்கு படம். நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். அதிக செலவில் எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படம் இது. படம் முழுவதும் ஆக்ஷன் மோடிலேயே இருக்கும். வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலியாகதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும். இளையராஜாவின் பெயர் என் படத்தில் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது. யுவனும் அருமையாக இசையமைத்துள்ளார்." இவ்வாறு அவர் பேசினார்.
