

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சைத் தொடர்பாக, விஷால் விடுத்துள்ள அறிக்கையில் டி.ஆருக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இடையே தன்ஷிகா "மன்னிக்க வேண்டும். வேண்டுமென்றே குறிப்பிடாமல் இல்லை. மறந்துவிட்டேன். உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்புள்ளது. " என்று கூறினார். ஆனாலும், டி.ராஜேந்தர் இறுதிவரை கடுமையாக சாடவே, தன்ஷிகா மேடையிலே அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.
டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே. நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
திரையுலகில் ஒரு பெண் நடிகை ஆவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாகத் தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.
'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகாவை சாடும் டி.ராஜேந்தர்: