விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கு தடை கோரி வழக்கு

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கு தடை கோரி வழக்கு

Published on

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்-2’ படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்நிலையில் இந்தப்படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்தது.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் கதையை அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி ‘ பிச்சைக்காரன் -2’ என்ற படத்தை எடுத்துள்ளதாகவும், எனவே வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் விசாரணையை வருகிற 18-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பரணி என்ற உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், தான் அஜித் நடித்த ‘சிட்டிசன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளதாக கூறி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாக சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு வருகிற செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in