

நீங்கள் என்னை இனியும் மன்னிப்பு கேட்க சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சி சர்ச்சையானது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கமல். அப்போது பாவனா விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அக்கேள்விக்கு 'பாவனா' பெயரைக் குறிப்பிட்டே பதிலளித்தார் கமல். அப்போது பத்திரிகையாளர் 'பாவனா' பெயரைக் குறிப்பிட வேண்டாமே என்று கேட்ட போது, "பெயரைக் குறிப்பிடுவதில் தவறில்லை" என்று பேசினார் கமல்.
இது தொடர்பாக பெண் அமைப்பினர், "பாவனா பெயரைக் குறிப்பிட்டது தொடர்பான விவகாரம் தங்களுடைய கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக கமலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக கமல், " "நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் கேட்கிறார்கள். நான் பெண்களை நேசிப்பவன் அவர்களுக்காக போராடுபவன். நான் காரணமின்றி யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.
நீங்கள் குற்றவாளிகளை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிக்கிறீர்கள். நான் ஏன் அவரது பெயரை குறிப்பிடக் கூடாது?. என் தாய் மற்றும் மகளுக்கு அடுத்து அவரின் பெயரைக் குறிப்பிட்டேன்.
நீங்கள் என்னை இனியும் மன்னிப்பு கேட்கச் சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை உங்கள் கடவுளைத் தவிர" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்துள்ளார்.