Published : 22 May 2017 01:35 PM
Last Updated : 22 May 2017 01:35 PM
'கோச்சடையான்' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தவறாக சென்றுவிட்டன என்று கான் திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.
கான் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், "'பாகுபலி'க்கு முன்பே சேகர் கபூர் 'பாணி' என்ற படத்தை உருவாக்க விரும்பினார். 7 - 8 வருடங்களுக்கு முன்பே இதே மாதிரியான பிரச்சினை இருப்பதை கணித்துவிட்டார். தொடர்ச்சியாக செய்துவிட வேண்டும் என நினைத்தவர், ஒரு கட்டத்தில் கைவிட்டுவிட்டார்.
பிறகு 'கோச்சடையான்' திரைப்படம் 'பாகுபலி' போன்று வந்திருக்க வேண்டிய படம் தான். ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் தவறாக சென்றுவிட்டன. 'பாகுபலி' மட்டுமே முதல் முயற்சி அல்ல. அதற்கு முன்பாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், அவை அனைத்துமே தோல்வியடைந்த முயற்சிகள். அவர்கள் அனைவருடைய எண்ணம் சரியாக இருந்தாலும், முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதில் 'பாகுபலி' குழு மிகவும் கொடுத்துவைத்தவர்கள். அனைவருமே பெரும் திறமைசாலிகள்" என்று தெரிவித்தார்.
'பாகுபலி 2'-வுக்கும் பாராட்டு
கான் திரைப்பட விழாவிலிருந்து சென்னை திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், 'பாகுபலி 2' பார்த்துவிட்டு தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், "'பாகுபலி 2' படத்தை தற்போது தான் சென்னையில் பார்த்தேன். கண்டிப்பாக 2000 கோடி வசூலைத் தாண்டும் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் தென்னிந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி நகர்த்தியுள்ளீர்கள்" என்று தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குநர் ராஜமெளலி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT