பாகுபலி 2வுக்கு வரவேற்பு: மே 5 வெளியீட்டு படங்களில் மாற்றம்

பாகுபலி 2வுக்கு வரவேற்பு: மே 5 வெளியீட்டு படங்களில் மாற்றம்
Updated on
1 min read

தமிழகத்தில் 'பாகுபலி 2' படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால், மே 5ம் தேதி வெளியாகவிருந்த படங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 நாட்களில் 40 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பங்கு தொகை போக மீதமுள்ள தொகை தயாரிப்பாளருக்கு கிடைக்கும்.

'பாகுபலி 2' படத்துக்கு மட்டும் சென்னையில் உள்ள திரையரங்குகளில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 435 காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. மற்ற படங்கள் அனைத்தும் சேர்த்து சுமார் 50 காட்சிகள் தான் திரையிடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தொடர்ச்சியாக மக்களின் கூட்டம் அதிகமாகவே இருப்பதால், இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என திரையுலக வர்த்தக நிபுணர்கள் கணித்திருந்தனர். மேலும், 'எந்திரன்' சாதனையை கண்டிப்பாக முறியடிக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.

மே 5ம் தேதி வெளியாகவிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள், தங்களுடைய வெளியீட்டு தேதியை மாற்ற பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் 'எங்க அம்மா ராணி' படம் மட்டுமே வெளியீட்டை உறுதி செய்துள்ளது. 'எய்தவன்' மற்றும் 'தொண்டன்' பின்வாங்கியுள்ளன. இதில் 'எய்தவன்' திரைப்படம் மே 12ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

திரையரங்கு உரிமையாளர் ஒருவரிடம் பேசிய போது, "வரும் வாரத்துக்கான 'பாகுபலி 2' டிக்கெட்கள் மொத்தமாக ஐ.டி நிறுவனத்தினரால் புக் செய்யப்பட்டுள்ளன. மே 5ம் தேதி வெளியாகவுள்ள படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது என்பது மிகவும் கடினம். அப்படி கிடைத்தால் போதிய காட்சிகள் கிடைக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in