பழம்பெரும் நடிகர் ஜமுனா மறைவு

பழம்பெரும் நடிகர் ஜமுனா மறைவு

Published on

தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஜமுனா இன்று காலமானார். அவருக்கு வயது 86.

கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்குப் பிறந்தவர் ஜமுனா. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலாவில் வளர்ந்தார். ஜமுனா தனது 16 வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

கடந்த 1953-ம் ஆண்டு வெளியான ‘புட்டிலு’ என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு ‘மிஸ்ஸியம்மா’ படம் புகழைத் தேடித் தந்தது.

‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுக்கு தாயாக நடித்திருந்தார். இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்தவர், ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றிருந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, 1989-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-களின் இறுதியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார் ஜமுனா. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in