

தமிழ் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்படும் திரைத் துறைச் செய்திகள் குறித்து பார்ப்போம்.
> ‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித்குமார் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்துள்ளார். ‘ஏகே 62’ என அழைக்கப்படும் இப்படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது புதிய அப்டேட்டாக இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அடுத்த மாதம் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக மும்பையில் நடக்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றன.
> ‘சர்தார்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘ஜப்பான்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘96’ பட இயக்குநர் ப்ரேம்குமாருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
> ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்கா தீவில் நடந்து வருகிறது. இன்று படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் விஜய் ஆண்டனி படுகாயமடைந்ததாகவும், உடனடியாக ஏர்ஆம்புலன்ஸ் மூலம் கோலாலம்பூர் கொண்டு செல்லப்பட்டவர், அங்கிருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
> நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர், லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒரு படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இதில் சிறப்புத்தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் மற்றொரு தயாரிப்பில் உருவாக உள்ள படத்தை ‘ஜெய்பீம்’ பட புகழ் ஞானவேல் இயக்க உள்ளதாகவும், அதில் நடிகர் ரஜினி நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.