''ஜாம்பவான்களுடன் நடிக்க வாய்ப்பளித்த தங்கர்பச்சானுக்கு நன்றி'' - யோகிபாபு

''ஜாம்பவான்களுடன் நடிக்க வாய்ப்பளித்த தங்கர்பச்சானுக்கு நன்றி'' - யோகிபாபு
Updated on
1 min read

“மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தங்கர்பச்சானுக்கு நன்றி” என நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘"கருமேகங்கள் கலைகின்றன" படத்தில் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குனர் ஜாம்பவான் பாரதிராஜா , இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஏனென்றால், அனைவருமே மேதைகள். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் தங்கர்பச்சான் தான். நாம் மறந்த வாழ்க்கையை நினைவிற்கு கொண்டு வருபவர் தங்கர் பச்சான். ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘அப்பாசாமி’ போன்ற அவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற படங்கள் தான்.

இந்த முறையில் எங்களை வைத்து ஒரு குடும்ப கதை எடுத்திருக்கிறார். அவருடன் பயணித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தடுத்து பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. வேகமாக, அதே நேரத்தில் கோபமாகவும் பணியாற்றுவார். அதனால்தான் வேலைகள் சரியாக நடக்கின்றன. அதேநேரத்தில், மற்ற நேரங்களில் எல்லோருடனும் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடன் பணியாற்றியதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது.

படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் அமைத்திருக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஜாம்பவான் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணை சுற்றித் தான் படத்தின் கதை இருக்கும். படத்தின் இறுதிவரை எனது பாத்திரம் நகைச்சுவையாகத் தான் இருக்கும். இது போன்ற நல்ல நல்ல கதைகளோடும், நல்ல குழுக்களோடும் நடிப்பதற்கு சந்தோஷமாகத் தான் இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர்பச்சானுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in