2.0 அப்டேட்: மொத்த பொருட்செலவில் 50 கோடி அதிகரிப்பு

2.0 அப்டேட்: மொத்த பொருட்செலவில் 50 கோடி அதிகரிப்பு
Updated on
1 min read

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் பொருட்செலவில் 50 கோடியை அதிகரித்திருக்கிறது லைக்கா நிறுவனம்.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதற்கு மட்டும் 6 கோடி செலவு செய்தார்கள். இப்படத்தின் மொத்த பணிகளும் முடிந்தவுடன், விளம்பரப்படுத்துவதற்கு மட்டும் பெரும் தொகையை செலவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in