

பின்னணி பாடகி சித்ரா மறைந்த தனது மகளின் பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் கன்னடம், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி வருபவர் பிரபல பின்னணி பாடகி சித்ரா. ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் சித்ரா பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார்.
இசைக்குயில் எனவும், சின்னக்குயில் சித்ரா என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். கடந்த 1988-ம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், 2011-ம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து சித்ராவின் மகள் நந்தனா உயிரிழந்தார்.
இந்நிலையில் மகள் நந்தனாவின் பிறந்தநாளையொட்டி இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், “நீ சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருப்பாய். வருடங்கள் கடந்தாலும் உனக்கு வயதாவதில்லை. நீ தூரமாக இருந்தபோதிலும் பாதுகாப்பாக இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஐ லவ், மிஸ் யூ. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பே நந்தனா” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.