முதல் பார்வை: துருவங்கள் பதினாறு - நிறைவான த்ரில்லர்!

முதல் பார்வை: துருவங்கள் பதினாறு -  நிறைவான த்ரில்லர்!
Updated on
1 min read

ஒரு கொலை, ஒரு விபத்து, ஒருவர் காணாமல் போவது என எல்லாமே ஒரே நாளில் 16 மணி நேரத்துக்குள் நடந்தால் அதன் கோணங்கள் என்ன என்பதே 'துருவங்கள் பதினாறு'.

ஒரு கொலை நடந்த சம்பவம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரகுமானுக்கு தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி யார் என்பதை தன் போலீஸ் குழுவுடன் புலனாய்வு செய்கிறார். அப்போது ஒரு விபத்து நடந்ததும், பெண் ஒருவர் காணாமல் போனதும் தெரிய வருகிறது. சந்தேகப்படுகிற, தெரிந்த எல்லோர் மீதும் விசாரணைப் படலம் தொடர்கிறது. ஆனால், அதற்கான புதிர்களுக்கான விடை 5 வருடங்களுக்குப் பிறகே கிடைக்கிறது. ஏன்? எதற்கு? எப்படி? என்பதற்கான பதில்களை திரைக்கதை மிக நேர்த்தியாய் சொல்கிறது.

ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கான கச்சிதத்துடன் கதை, திரைக்கதை அமைத்திருக்கும் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேனுக்கு தமிழ் சினிமாவின் சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ரகுமானுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனால், அவரது நடிப்பு அனுபவம், உடல் மொழி, விசாரிக்கும் விதம், போலீஸ் மொழியில் பேசும் லாவகம் என படத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் தன் தோள்களில் தூக்கி நிறுத்துகிறார். டெல்லி கணேஷ் ஒரே காட்சியில் வந்து போனாலும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

கான்ஸ்டபிளாக வரும் கௌதம், மூன்று நண்பர்கள், ராஜீவ், க்ரிஷ், ஸ்ருதி, வைஷ்ணவி, பேப்பர் போடும் இளைஞர் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

சுஜித் சாரங்கின் கேமரா ரத்தம் தெறிக்காத குற்றப் பின்னணியை, இருள், வெளிச்சத்தின் பல கோணங்களை சாதுர்யமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் கச்சிதம்.

பாடல் இல்லை, காதல் இல்லை, காமெடி இல்லை, பன்ச் வசனம் இல்லை. ஆனால் இதையெல்லாம் இல்லாமல் ரசிக்க வைக்கும் விதத்தில் பரபரப்பாக, விறுவிறுப்பாக கதை நகர்த்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

மூன்று விதமான மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் போதும் முன் பின் காட்சிகளை நகர்த்தும்போதும் அலுப்பு ஏற்படாமல், அதே சமயம் குழப்பம் ஏற்படாமல் காட்டியிருப்பதும், படத்துக்காக அவர் கொடுத்திருக்கும் டீட்டெய்லிங்கும் புத்திசாலித்தனம்.

அந்த விபத்துக்குப் பிறகு ஏன் ரகுமான் கௌதமைத் தேடவில்லை, விபத்துக்குக் காரணமானவர்கள் என்ன ஆனார்கள், அவர்கள் செய்த குற்றத்துக்கு தண்டிக்கப்பட்டார்களா என சில கேள்விகள் மட்டுமே எழுகின்றன.

இறுதிக்காட்சியில் வரும் அந்த ட்விஸ்ட்டைத் தவிர்த்திருந்தாலும் படத்துக்கு எந்த இழப்பும் இல்லை. மொத்தத்தில் 'துருவங்கள் பதினாறு' நிறைவான த்ரில்லர் படம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in